வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி “வாக்காளர் அதிகார யாத்திரை” என்ற பெயரில் பீகாரில் பேரணியை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கிய இந்த பேரணி பீகார் மாநிலம் முழுவதும் 16 நாட்கள் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், பீகாரில் ராகுல் காந்தியின் வருகைக்காக காத்திருந்த கூட்டம் என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி கடந்த ஜூன் மாதம் மராட்டிய மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி உண்மையில் பீகாரில் ராகுல் காந்தி வருகையின் போது எடுக்கப்பட்டது தானா என்பதை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, வைரலாகும் அதே காணொலி ஆங்கிலத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், Lala என்ற எக்ஸ் பயனர் வைரலாகும் அந்த காணொலி வேறொரு நிகழ்வுடன் தொடர்புடையது என்று அதுகுறித்த ஸ்க்ரீன்ஷாட்டை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கிடைத்த தகவலை கொண்டு ஸ்கிரீன்ஷாட்டில் இருக்கும் all_about_phaltan என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியபோது, கடந்த ஜூன் 22ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அதில் #bakasur #mathur போன்ற ஹேஷ்டேக்குடன் “Hindkesri pedgaon maidan 2025” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கூகுளில் தேடிய போது, "பகாசுர்" மற்றும் "மாத்தூர்" ஆகியவை மகாராஷ்டிராவில் உள்ள மாட்டு வண்டி பந்தயங்களுடன் தொடர்புடைய பெயர்கள் என்று தெரியவந்தது.
மேலும், காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று மாட்டுவண்டி பந்தயம் மகாராஷ்டிராவில் உள்ள Hindkesri pedgaon என்ற விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக hind_kesari_maidan_pusegaon என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு காணொலிகள் பதிவிடப்பட்டுள்ளன.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் மகாராஷ்டிராவில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்துடன் தொடர்புடைய காணொலியை ராகுல் காந்தியின் வருகைக்காக பீகார் மாநிலத்தில் காத்திருந்த கூட்டம் என்று தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரிய வந்தது.