தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் போதே அவர் குறித்து பேசக்கூடிய காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில் பேசும் அவர், உதயநிதி ஸ்டாலின் அவர்களே, இன்றைக்கு திரைத்துறையில் பிரபலமாக, உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய உங்களை மக்கள் நேசிக்கின்றார்கள்.
அரசியலில் உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த மேடையில் இருந்து இறங்கும்போது முழுமையாக முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்கின்ற உறுதியை நீங்கள் தெரிவித்துவிட்டு இந்த மேடையில் இருந்து இறங்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்” என்கிறார்.
இதனைக் கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் முழுநேர அரசியலில் ஈடுபட கூறுவதாகவும், துணை முதல்வர் பகுதி நேர அரசியல் தான் செய்கின்றார் என்றும் கூறி இக்காணொளியை பரப்பி வருகின்றனர்.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் அமைச்சர் கோரிக்கை வைத்தது பற்றி நினைவு கூறியதை தவறாக திரித்து பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய மா. சுப்பிரமணியன் பேசிய காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, தந்தி ஊடகம் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி வைரலாகும் காணொலியின் நேரலைப் பதிவை பதிவிட்டிருந்தது. அதில், 2:53 பகுதியில் பேசும் அமைச்சர், “சைதை தொகுதி மக்களின் சார்பில் 2018 ஜனவரியில் அவரிடத்தில் முன்வைத்த கோரிக்கை…” என்று கூறிவிட்டு வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று, “உதயநிதி ஸ்டாலின் அவர்களே, இன்றைக்கு திரைத்துறையில் பிரபலமாக, உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய உங்களை மக்கள் நேசிக்கின்றார்கள்.
அரசியலில் உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்பி வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த மேடையில் இருந்து இறங்கும்போது முழுமையாக முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்கின்ற உறுதியை நீங்கள் தெரிவித்துவிட்டு இந்த மேடையில் இருந்து இறங்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்” என்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
தொடர்ந்து “மாண்புமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பேசும்போது (2018ல் பேசும் போது) சொன்னார் சுப்பிரமணி மேடையில் இருந்து இறங்கும்போது முழுமையான அரசியலில் ஈடுபட வேண்டும் என்று சொன்னார். ஆனால், நான் முழுமையான அரசியலில் ஈடுபடுவது என்று முடிவெடுத்து விட்டே மேடையில் ஏறி இருக்கிறேன்” என்று கூறினார்.
Conclusion:
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2018ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் தான் கோரிக்கை வைத்தது பற்றி நினைவு கூறி பேசுவதை திரித்து, துணை முதல்வரை அமைச்சர் ஒருவர் நீங்கள் முழுநேர அரசியலில் ஈடுபடவேண்டும் என்று கூறுகிறார் என்று தவறாக பரப்பி வருகின்றனர் என்று நம் தேடலின் மூலம் தெரியவந்தது.