

“துபாயில் 67 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் இன்னைக்கு ஈரான் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கு” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது
Fact check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி துபாயில் உள்ள 67 மாடி ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டபோது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இந்தத் தகவலின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, அந்த காணொலியை நாம் Reverse Image Search ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
எமது ஆய்வில், வைரலாகும் அந்த காணொலி ஈரான் தாக்குதல் என கூறப்படும் தகவலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. கடந்த ஜூன் 14, 2025 அன்று, துபாயில் உள்ள 67 மாடிக் கட்டிடம் ஒன்றில் எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தினமணி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில், "67 மாடிக் கட்டடத்தில் தீவிபத்து! 3820 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!" என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளது.
மேலும், நாம் மேற்கொண்ட தேடலில், சன் நியூஸ், தினமலர், புதிய தலைமுறை போன்ற முன்னணி ஊடகங்களும் இத்தீவிபத்து குறித்து விரிவான செய்திகளை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. விபத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, துபாயில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக பரப்பப்படும் காணொலி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் துபாயில் நிகழ்ந்த ஒரு தீ விபத்தின் பழைய காணொலியை எடுத்து, தற்போதைய பதற்றமான சூழலோடு இணைத்து தவறான தகவலுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.