Fact Check: வீரன் சுந்தரலிங்கத்தின் புகைப்படத்தை கையில் பிடித்தவாறு நிற்கும் நடிகை நயன்தாரா? உண்மை என்ன?
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கனாரின் புகைப்படத்தை நடிகை நயன்தாரா கையில் பிடித்திருந்தவாரு உள்ள புகைப்படத்தை அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காணொலியாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தங்களது சமூகத்தைச் சேர்ந்தவரை நயன்தாரா ஆதரிப்பது போன்று இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நடிகை நயன்தாராவின் புகைப்பட தொகுப்பை நியூஸ் 18 தமிழ்நாடு தனது இணையதளத்தில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பதிவிட்டு இருந்தது. அதில், வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதில் வீரன் சுந்தரலிங்கத்தின் புகைப்படத்திற்கு பதிலாக நயன்தாராவின் வரையப்பட்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, தேடுகையில் jfwonline என்ற இணையதளத்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி இதே புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அதில், "நயன்தாரா நடித்த டோரா திரைப்படத்தின் விநியோகஸ்தர்களான ஆரா சினிமாஸ், “நயன்தாராவுடன் செல்ஃபி” என்ற ஒரு சுவாரஸ்யமான போட்டியை நடத்தினர். இப்போட்டியின், வெற்றியாளர்கள் நயன்தாராவை சந்திக்க ஏப்ரல் 4ஆம் தேதி சென்னைக்கு அழைக்கப்பட்டனர். இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ரசிகர்கள் கலந்து கொண்டு கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருடன் உரையாடினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே புகைப்படத்தை Galatta ஊடகமும் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வீரன் சுந்தரலிங்கத்தின் புகைப்படத்துடன் நடிகை நயன்தாரா நிற்பது போன்று வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.