
தமிழ்நாட்டின் பிரபல உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அடையார் ஆனந்த பவன் இந்தியாவில் ஹலால் ஸ்டாம்புடன் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், இனிமேல் இந்த உணவகத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்றும் கூறி இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் அடையார் ஆனந்த பவனின் வெளிநாட்டு கிளைகளில் ஹலால் ஸ்டாம்புடன் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இந்தியாவில் விற்கப்படும் அடையார் ஆனந்த பவன் உணவுப் பொருட்களில் ஹலால் ஸ்டாம்ப் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து Amazon, Flipkart உள்ளிட்ட ஆன்லைன் வணிகத் தளங்களில் தேடினோம். அப்போது, அதில் ஹலால் ஸ்டாம்ப் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், அடையார் ஆனந்த பவன் ஹலால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக எந்த ஒரு செய்தியோ தகவலோ வெளியிடப்படவில்லை.
தொடர்ந்து இதுகுறித்து அடையார் ஆனந்த பவன் உணவக நிர்வாக இயக்குனரின் உதவியாளரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டறிந்தோம். அதற்கு, “இந்தியாவில் ஹலால் ஸ்டாம்ப் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் விற்கப்படுவது இல்லை. ஹலால் ஸ்டாம்புடன் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அந்நாட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு விற்கப்படுகிறது. அதுவும் அந்நாட்டில் பிரான்சைஸ் எடுத்துள்ள உரிமையாளர்கள் இத்தகைய ஹலால் ஸ்டாம்பிங் செய்து விற்பனை செய்கின்றனர்” என்று விளக்கம் அளித்தார்.
Conclusion
முடிவாக, நம் தேடலில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அடையார் ஆனந்த பவன் உணவுப் பொருட்களில் ஹலால் ஸ்டாம்பிங் இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.