
“பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலூச் சுதந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்றனர் இதுதான் அகண்ட பாரதம்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், இந்தியாவின் மூவர்ணக்கொடியை கையில் பிடித்தவாறு தொப்பி அணிந்த சிலர் ஊர்வலம் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இவர்கள் பலூசிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் பலூசிஸ்தான் சுதந்திரம் அடைந்ததற்காக இவ்வாறு இந்திய கொடியுடன் ஊர்வலமாக செல்கின்றனர் என்றும் குறிப்பிட்டு இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் இருப்பது சூரத்தில் நடைபெற்ற போஹ்ரா முஸ்லிம்களின் திரங்கா யாத்திரை என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, கடந்த மே 16ஆம் தேதி “சூரத்தில் நடைபெற்ற திரங்கா யாத்திரை” என்று Dawoodi Bohra E-Magazine என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மே 17ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி, “சூரத்தில் நடைபெற்ற தாவூதி போஹ்ரா சமூகத்தினரின் திரங்கா யாத்திரை” என்ற கேப்ஷனுடன் Aadhan Hindi என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, இதுதொடர்பாக கடந்த மே 15ஆம் தேதி Indian Express ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி, “யாத்திரை நிகழ்வின் சிறப்பம்சமாக, தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த Saifee Scout Suratன் இசைக் குழுக்கள் பேன்ட் இசைத்தனர். யாத்திரை பாகல் என்ற பகுதியில் தொடங்கி நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, வைரலாகும் காணொலியை ஆய்வு செய்தபோது. அதில், தாவூதி போஹ்ரா சமூகத்தின் பேன்ட் இசைக்குழுவான Saifee Scout Surat இருப்பதை நம்மால் காணமுடிகிறது.
மேலும், பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய ‘Operation Sindoor’ என்ற பொயர் தாங்கிய பேனரும் இடம்பெற்றுள்ளது. அதில், “திரங்கா யாத்திரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம் தேடலில் கிடைத்திருக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் வைரலாகும் காணொலி சூரத்தில் நடைபெற்ற போஹ்ரா முஸ்லிம்களின் திரங்கா யாத்திரை என்று தெரிய வந்தது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் பலூசிஸ்தான் சுதந்திரம் அடைந்ததாக அறிவித்த பலூச்கள் இந்திய கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்றதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலியில் இருப்பது சூரத்தில் நடைபெற்ற தாவூதி போஹ்ரா சமூகத்தினரின் திரங்கா யாத்திரை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.