Fact Check: ’ஜனநாயகன்’ திரைப்படத்தை கசியவிட்டதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டனரா?

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்' திரைப்படக் காட்சிகள் இணையத்தில் கசியவிட்ட விவகாரத்தில் திமுகவினர் கைது என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது
Fact Check: ’ஜனநாயகன்’ திரைப்படத்தை கசியவிட்டதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டனரா?
fifthestatedigital1
Published on
2 min read

​விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் நடைமுறைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் மறு தணிக்கை குழு இப்படத்தை ஆய்வு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில் எதிர்பாராத விதமாக முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் என அறியப்படுபவர்கள் சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். ‘ஜனநாயகன்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் தான் என்றும் அதற்காக அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்தப் பதிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Fact Check:

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இரண்டு புகைப்படங்களையும் ‘Reverse Image Search’ முனையில் ஆய்வு செய்தோம். ஆய்வில், அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஞானசேகரன் என்பவரின் புகைப்படம் என்று தெரியவந்தது. அந்தப் படத்தில் உள்ள நபரின் சட்டையின் நிறத்தை மட்டும் எடிட் செய்து மாற்றி தற்போது தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

​இரண்டாவது புகைப்படம் ‘The News Minute’ ஊடகத்தில் 2019 டிசம்பர் மாதம் வெளியான செய்தியில் இடம்பெற்றுள்ளது. கோவையில் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரின் புகைப்படமாகும். அசல் புகைப்படத்தில் குற்றவாளி தனது முகத்தைக் கைக்குட்டையால் மூடியிருப்பார்.

ஆனால், அந்தப் புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் திருத்தி முகம் தெரிவது போன்றும் சட்டையின் நிறத்தை மாற்றியும் போலியாக உருவாக்கியுள்ளனர். ஏப்ரல் 12ஆம் தேதி வெளியான அதிகாரப்பூர்வ செய்திகளின்படி ‘ஜனநாயகன்’ படத்தை கசியவிட்டதாக சைபர் கிரைம் காவல்துறையினர் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர் என்பது உண்மைதான்.

இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் முதன்முதலில் படத்தை கசியவிட்டவர்களா அல்லது இணையத்தில் பகிர்ந்தவர்களா என்பது குறித்து முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் எதையும் இதுவரை பொதுவெளியில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பழைய குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களின் புகைப்படங்களை எடிட் செய்து போலியாக உருவாக்கி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கசியவிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டதாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று தெளிவாகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in