

தவெக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்திற்குள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டனர் என்று சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
Fact check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.
“தவெக ஆட்சி அமைந்த 3 மாதங்களுக்குள் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை” என்ற தகவல், ‘நியூஸ் தமிழ்’ ஊடகத்தின் காணொலியை மேற்கோள் காட்டி பரப்பப்பட்டு வருகிறது. எனவே, அந்த ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இதுகுறித்து விரிவான தேடுதலை மேற்கொண்டோம்.
அத்தேடலில், இக்காணொலி 2024 நவம்பர் 15 அன்று ‘நியூஸ் தமிழ்’ யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
அக்காலகட்டத்தில் ஆதவ் அர்ஜூனா அமைச்சராகவோ அல்லது தவெக உறுப்பினராகவோ இல்லை; மாறாக, அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) முக்கியப் பொறுப்பில் இருந்தார். திமுக குறித்து விமர்சித்துப் பேசிய காரணத்தால், 2024 டிசம்பர் 9 அன்று அவர் விசிகவிலிருந்து 6 மாதங்களுக்குத் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின்னரே விசிகவிலிருந்து முழுமையாக விலகிய அவர், 2025 ஜனவரி 31 அன்றுதான் தவெகவில் இணைந்தார்.
மேலும் ஆய்வை முன்னெடுத்தபோது, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகனான ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து ‘தினத் தந்தி’ உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது உறுதியானது. அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும், 2024 நவம்பர் 18 அன்று மார்ட்டின் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ரூ.12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.6.42 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை ரசீதுகள் (FDR) முடக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Conclusion:
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வைரலாகும் காணொலி தற்போதைய நிகழ்வு அல்ல என்பதும், அது 2024-ல் திமுக ஆட்சிக் காலத்தில் பதிவான பழைய பதிவு என்பதும் தெளிவாகிறது. அச்சமயம் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்தார்; அவர் 2025 ஜனவரி 31 அன்றே தவெகவில் இணைந்தார். எனவே, 2024 நவம்பரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை, தற்போதைய தவெக ஆட்சியுடன் தொடர்புபடுத்திப் பரப்புவது அப்பட்டமான வதந்தியாகும்.