
ஹவுத்தி துறைமுகம் மீது சற்றுமுன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், வெடிவிபத்து தொடர்பான காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இந்நிகழ்வு 2024ஆம் ஆண்டு யேமனில் நடைபெற்றது தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி The Analyser என்ற எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “இஸ்ரேல் ஹவுத்திகள் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தெளிவான காணொலியைக் கொண்டு மீண்டும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி Reuters ஊடகம் வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, யேமனில் உள்ள ஹவுத்திக்கள் தொடர்பான இடங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியதாகவும், மேலும் லெபனானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது. சமீப நாட்களில் இஸ்ரேல் மீதான ஹவுத்தி ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக யேமனின் Hodeidah துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
BBC ஊடகம் அதே தேதியில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், “யேமனின் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடி விபத்து குறித்த காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வருகிறது. ஹவுத்திக்களின் Al-Masirah தொலைக்காட்சி அல்-ஹாலி மின் நிலையத்தில் இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்ட தீவிபத்தை காட்சி படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய விமானப்படை மின் உற்பத்தி நிலையங்களையும், "ஈரானிய ஆயுதங்களை பிராந்தியத்திற்கு மாற்ற ஹவுத்திகளால் பயன்படுத்தப்பட்ட" ஒரு துறைமுகத்தையும் குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாக்குதல் தொடர்பான செய்தியை CNN உள்பட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சற்று முன் ஹவுத்தி துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அது இஸ்ரேலிய ராணுவம் யேமனில் உள்ள மின்நிலையத்தை தாக்கியது தொடர்பான காணொலி என்றும் தெரியவந்தது.