
டெல்லியில் மாதுளை ஜுஸில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் ரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்து வந்த அயூப் கான் என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. மேலும், அதில் கைது செய்யப்பட்டுள்ள அயூப் கான் தனது முதலாளி ஷோஹைப் தான் இவ்வாறு கலந்து விற்கச் சொன்னதாகவும் தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் மாதுளை ஜுஸில் கலர் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியயை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, “டெல்லி ராஜிந்தர் நகர் பகுதியில் ரசாயனம் கலந்து மாதுளை ஜுஸ் விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்ற தலைப்புடன் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி Times Now தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலியுடன் செய்தி வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அதே தேதியில் ETV Bharat ஊடகம் இதுதொடர்பாக செய்து வெளியிட்டிருந்தது. அதன்படி, தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில், ஜூஸ் விற்பனையாளர்கள் அயூப் கான் மற்றும் ராகுல் ஆகியோரை சிலர் அடித்து உதைத்தனர். இருவரும் மாதுளை ஜுஸில் கலர் கலந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று மாதிரிகளை சேகரித்தார்.
விசாரணையில், கடையில் பணிபுரியும் அயூப் கான் மற்றும் ராகுல், கடை உரிமையாளர் ஷோஹைப் ஜூஸில் கலர் கலந்து விற்கச் சொன்னதாகக் கூறினர். இதுதொடர்பாக தற்போது வரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Aaj Tak ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, “காலை 10:30 மணியளவில், சங்கர் சாலையில் உள்ள ஒரு கடையில் கலர் கலந்த ஜுஸ் விற்பனை செய்வதாக ராஜிந்தர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததாக மத்திய துணை ஆணையர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். காவல்துறையினர் நேரில் சென்று கடையை சோதனை செய்ததில் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், காவல் அதிகாரி உணவு பாதுகாப்பு ஆய்வாளரை அழைத்து மாதிரிகளை சேகரித்தார். அவர்களின் அறிக்கை வந்த பிறகு மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியான எந்த செய்தியிலும் மாதுள ஜுஸில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்துள்ளதாக குறிப்பிடப்படவில்லை.
Conclusion
முடிவாக, நம் தேடலில் மாதுள ஜுஸில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக வைரலாகும் தகவல் தவறானது உண்மையில் அவர்கள் கலர் கலந்த ஜுஸை விற்பனை செய்துள்ளனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.