Fact Check: இந்திய ராணுவ தாக்குதலால் சேதமடைந்ததா பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம்?

பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் இந்தியாவின் ராணுவ தாக்குதலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
கராச்சி துறைமுகத்தை தாக்கிய இந்திய ராணுவம்
கராச்சி துறைமுகத்தை தாக்கிய இந்திய ராணுவம்fifthestatedigital1
Published on
2 min read

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இரு நாடுகளும் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி ஈரான் துறைமுக வெடிவிபத்து தொடர்பானது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உண்மையில் கராச்சி துறைமுகம் தானா என்பதை கண்டறிய முதலில் காணொலியில் இடம் பெற்றுள்ள noghtezan.info என்ற வார்த்தையை பயன்படுத்தி கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அதே பேரில் இயங்கக்கூடிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ஷஹித் ராஜாயி துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் பிரத்யேக காணொலி என்று வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, காணொலியில் குறிப்பிட்ட பகுதியை  ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஈரானிய ஊடகமான Tasnim News “ஷஹித் ராஜாயி துறைமுகம்” என்று குறிப்பிட்டு வைரலாகும் அதே காணொலியை அதே தேதியில் பதிவிட்டிருந்தது. கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் மீண்டும் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இது தொடர்பாக BBC செய்தி வெளியிட்டிருந்தது.

அதன்படி, ஈரானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 800 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் தெற்கு நகரமான பந்தர் அப்பாஸுக்கு அருகிலுள்ள நாட்டின் மிகப்பெரிய வணிகத் துறைமுகமான ஷஹித் ராஜாயியில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) காலை வெடிவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து தனியார் கடல்சார் இடர் மேம்பாட்டு ஆலோசனை நிறுவனமான ஆம்ப்ரே இன்டெலிஜென்ஸ் கூறுகையில், “விபத்துக்குள்ளான கண்டெய்னரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் திட எரிபொருளான சோடியம் பெர்குளோரேட்டை (Sodium Perchlorate)” இருந்ததாக தெரிவித்துள்ளது. “ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்துவதற்கான இந்த ஏரிபொருள் முறையற்ற முறையில் கையாண்டதால் விபத்து ஏற்பட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “கராச்சி துறைமுகம் இந்தியாவின் ராணுவ தாக்குதலால் சேதம் அடைந்ததாக இந்திய ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. கராச்சி துறைமுகம் வழக்கம் போல் பாதுகாப்பாக இயங்குகிறது” என்று கராச்சி துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் நேற்று (மே 9) பதிவிட்டுள்ளது.

அதேபோன்று, கராச்சி துறைமுகம் எவ்வித சேதமும் இன்றி இயல்பாக இயங்கி வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்களான GTV, Dunya ஆகியவை நேரலையில் செய்தி வழங்கி வருகின்றன.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் இந்தியாவின் ராணுவ தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக வைரலாகும் காணொலி உண்மையில் ஈரானின் ஷஹித் ராஜாயி துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பான காணொலி என்றும் கராச்சி துறைமுகம் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in