Fact Check: பாலை ஹலால் ஆக்குவதற்காக பால் கொப்புரையில் குளிக்கும் இஸ்லாமியர்; கேரளாவில் நடைபெற்ற சம்பவமா?

கேரள மக்களுக்கு வழங்கப்படும் பாலை ஹலால் ஆக்குவதற்காக பால் கொப்புரையில் இஸ்லாமியர் ஒருவர் குளிப்பதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
பாலை ஹலால் ஆக்க பால் கொப்புரையில் குளிக்கும் இஸ்லாமியர் என்று வைரலாகும் காணொலி
பாலை ஹலால் ஆக்க பால் கொப்புரையில் குளிக்கும் இஸ்லாமியர் என்று வைரலாகும் காணொலி

“இந்த பாலை தான் கேரளா மக்கள் இவ்வளவு நாளும் குடிச்சிட்டு இருந்திருக்கிறார்கள் ஹலால் பால் மிகவிரைவில் தமிழகத்திலும்..” என்ற கேப்ஷனுடன் நபர் ஒருவர் பால் கொப்புரை ஒன்றில் குளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறு பாலில் குளிப்பதன் மூலம் பால் ஹலாலாக மாறுவதாகவும், இப்பால் கேரளாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறி பரப்பி வருகின்றனர்.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் சம்பவம் துருக்கியில் நடைபெற்றது என்று தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி oliberal என்ற இணையதளத்தில் இது தொடர்பாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், இச்சம்பவம் துருக்கியின் கொன்யா என்ற பகுதியில் நடைபெற்றது என்றும் இதன் காரணமாக அந்த பால் உற்பத்தி நிறுவனத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் Business today செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “கொன்யாவின் வேளாண்மை மற்றும் வனத்துறை இயக்குநரகம், சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிறுவனத்திடம் அபராதம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக நிறுவனம் மூடப்பட்டதாகவும் ஹுரியட் டெய்லி ஊடகம் தெரிவித்துள்ளது.

பாலில் குளித்தவர் எம்ரே சாயர் என்றும், இந்த காணொலியை தனது டிக்டாக் கணக்கில் பகிர்ந்தவர் உகுர் துர்குட் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக துருக்கியின் hurriyetdailynews ஊடகமும் அதே ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி செய்தியாக வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக கேரளாவில் பாலை ஹலால் ஆக்குவதற்காக பால் கொப்புரையில் இஸ்லாமியர் குளிப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அது உண்மையில் துருக்கியில் நடைபெற்ற சம்பவம் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in