“மணிப்பூருக்கு சென்ற ராகுல் காந்தியை திரும்பி போ.... திரும்பி போ.... என விரட்டி அடித்த மணிப்பூர் மக்கள்… சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம் ஆதலால் மணிப்பூருக்கு வராமல் திரும்பிச் செல்லுங்கள் Rahul Gandhi !.
என தொடர் முழக்கம் செய்வதறியது திரும்பிய ராகுல்காந்தி!!!...” என்ற கேப்ஷனுடன் ராகுல் காந்தி மக்களால் விரட்டியடிக்கப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலி அசாமில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜன 21, 2024 அன்று ANI ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ”அசாமின் நாகான் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பெருவாரியான மக்கள் கோஷமிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிடைத்த தகவலைக் கொண்டு தேடுகையில் கடந்த ஜன 21ஆம் தேதி News 18 இது தொடர்பாக விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், அசாமின் நாகோன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜன 21) மாலை சாலையோர உணவகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கும்பலால் சூழப்பட்டார். ராகுல் காந்தியும் வேறு சில தலைவர்களும் அந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரூபோஹியில் இரவு தங்கும் இடத்திற்கு செல்லும் வழியில் அம்பகானில் உள்ள உணவகத்தில் நிறுத்தப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது.
கூட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன மற்றும் சமகுரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரகிபுல் ஹுசைனைக் குறிப்பிடும் “Anyay Yatra” மற்றும் “Rakibul Go Back” போன்ற வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் கையில் வைத்து நின்று கோஷங்களை எழுப்பினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Deccan Herald ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக மணிப்பூரில் ராகுல் காந்தி பொதுமக்களால் விரட்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி அசாமில் எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.