
தமிழ்நாடு அரசால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தைக் காமராஜர் கொண்டு வருவதற்கு முன்பே, திமுக கொண்டு வந்ததாக திராவிடக் கழகத்தின் பேச்சாளர் மதிவதனி கூறியதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலி எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2023ஆம் ஆண்டு மே23ஆம் தேதி வைரலாகும் இதே காணொலியின் முழு நீள பதிவு Neerthirai என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்தது.
அதன் 27:17 முதல் 27:34 வரையிலான பகுதியில் பேசும் மதிவதனி, “மதிய உணவு திட்டத்தை காமராஜர் அறிமுகப்படுத்தினார். ஆனால், அவர் கொண்டு வருவதற்கு முன்பே அத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கத்தின் முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சி” என்று கூறுகிறார். இதன் மூலம் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, உண்மையில் நீதிக்கட்சி தான் மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி BBC Tamil ஊடகம் தமிழ்நாடு அரசின் மதிய உணவு திட்டம் தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், “முதன் முதலில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிக்கூடங்களில்தான் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1920ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் நீதிக் கட்சியின் தலைவராக சர். பிட்டி. தியாகராயர் இருந்தபோது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க முடிவுசெய்யப்பட்டது. அப்போது அந்தப் பள்ளிக்கூடத்தில் 165 மாணவர்கள் படித்துவந்தனர். ஒரு மாணவருக்கு ஒரு அணாவரை செலவழிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதிவதனி கூறிய தகவல் உண்மைதான் என்று தெரிய வருகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வருவதற்கு முன்பே, திமுக கொண்டு வந்ததாக திராவிடர் கழக பேச்சாளர் மதிவதனி கூறியதாக வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.