
மராட்டிய மாநிலம் புனேவில் ஒரு இந்து குடும்பம் பாக்கிஸ்தானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக அவர்களை இஸ்லாமியர்கள் தாக்குவதாக கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. இத்தாக்குதலை தடுக்க ஒரு இந்து கூட முன் வரவில்லை என்றும் நாளைக்கு ஏனைய இந்துக்களுக்கும் இதே நிலைதான் என்றும் கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்த உண்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Daily News Post India என்று இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்து வெளியிடப்பட்டிருந்தது. அதில், புனேவின் பவானி பெத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கார் ஹாரன் அடிப்பது தொடர்பான விஷயத்திற்கு தெரு சண்டை வெடித்ததாகக் கூறப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், Lokmatt Times ஊடகத்தில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, குறுகிய சந்தில் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்த ஷோயிப் உமர் சையத், ஹர்ஷ் கேஷ்வானி என்பவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஹர்ஷின் குடும்பத்தினர் சகோதரர் கரண், சகோதரி நிகிதா, தாத்தா பாரத் ஆகியோர் ஷோயிபை தடுத்தபோது, ஷோயிப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். ஷோயிப், ஹர்ஷை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் வீட்டை எரிப்பதாக மிரட்டியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஹர்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மற்றவர்களும் காயமடைந்தனர். இதுதொடர்பாக கேஷ்வானி அளித்த புகாரின் பேரில் கதக் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Punekar News என்ற ஊடகமும் வெளியிட்டுள்ளது. மேலும், PUNE PULSE என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் காணொலியுடன் இதே செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் பாக்கிஸ்தானுக்கு எதிராக பதிவிட்ட இந்து குடும்பத்தினரை இஸ்லாமியர்கள் தாக்குவதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலியில் உள்ள சம்பவம் வாகன ஹாரன் தொடர்பாக இருபிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.