ராமர் கோயில் கும்பாபிஷேகம்: மக்கள் அயோத்தி செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யபடுகிறது என்றாரா தமிழ்நாடு முதல்வர்?

தமிழக மக்கள் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல அரசு சார்பாக உணவுடன் கூடிய வாகன வசதி ஏற்பாடு செய்யபடுகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் APB Nadu ஊடகத்தின் நியூஸ்கார்ட்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல அரசு சார்பாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளது என்று வைரலாகும் நியூஸ்கார்ட்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல அரசு சார்பாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளது என்று வைரலாகும் நியூஸ்கார்ட்
Published on
2 min read

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், “அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக தமிழக மக்கள் செல்ல தமிழக அரசு சார்பாக உணவுடன் கூடிய வாகன வசதி ஏற்பாடு செய்யபடுகிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாக ஜனவரி 11ஆம் தேதியிட்ட ABP Nadu ஊடகத்தின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் நியூஸ்கார்ட்
வைரலாகும் நியூஸ்கார்ட்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய முதலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவ்வாறு கூறினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜனவரி 6ஆம் தேதி இந்து தமிழ் திசை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வரப்பெற்றால், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் செல்வதற்கு உண்டான உதவிகளை செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து முதல்வர் கருத்து தெரிவித்தாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அதேபோன்று அவரது சமூக வலைதளப் பக்கங்களிலும் தேடினோம். நம் தேடலில், அவ்வாறான எந்த ஒரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்று தெரியவந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 5.8.2020 அன்று நடைபெறவுள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற எக்ஸ் பதிவு மட்டுமே ராமர் கோயில் தொடர்பாக முதல்வரின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ABP Nadu ஊடகத்தின் சமூக வலைதளப் பக்கங்களிலும் ஜனவரி 11ஆம் தேதி வைரலாகும் நியூஸ் கார்ட் வெளியிடப்பட்டுள்ளதா என்று தேடியபோது அவ்வாறாக எந்த ஒரு நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழக மக்கள் செல்ல அரசு சார்பாக உணவுடன் கூடிய வாகன வசதி ஏற்பாடு செய்யபடுகிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார் என்று வைரலாகும் ABP Nadu ஊடகத்தின் நியூஸ்கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in