“பாரத் மாதா கி ஜெய்...என கூறிய முதியவரை தாக்கும் முஸ்லீம் இளைஞர்கள்.. இடம்: பிந்தி பஜார், மும்பை” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வயதான முதியவர் ஒருவரை இளைஞர்கள் பலரும் சேர்ந்த தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மன்ஜிந்தர் சிங் சிர்சா வைரலாகும் காணொலியை தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள ஆசாத் சவுக் சந்தையில் முதியவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்!
முதியவர்களிடமும், நிராயுதபாணிகளிடமும் சின்னச் சின்ன விஷயத்திற்காக சண்டை போடுவது மிகவும் மோசமான மனநிலை. காணொலியில் சண்டையிடும் இளைஞர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யுமாறு ராஜஸ்தான் காவல்துறையையும், ராஜஸ்தான் முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு ராஜஸ்தான் காவல்துறையை டேக் செய்துள்ளார்.
மேலும், 2019ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி அவரது எக்ஸ் பக்கத்தில் “இச்சம்பவம் 15.10.2019 அன்று பில்வாரா பகுதியில் நடைபெற்றது. இதில், பாதிக்கப்பட்டவர் ஹோட்சந்த் என்ற முதியவர். பகவான் தாஸ் சிந்தி (37), மஞ்சூர் ஷேக் (31), இர்பான் ஷேக் (34), முல்லா சிந்தி (39) மற்றும் ஹேமந்த் ராம்சந்திர நதானி (45) என ஐவர் இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்” என்ற காவல்துறை அறிக்கையைப் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தேடுகையில் இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக தி குவிண்ட் சம்பவம் குறித்த காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை பதிவிட்டுள்ளது. அதன்படி, இச்சம்பவத்தில் மத ரீதியான எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று தெளிவாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, மும்பையில் பாரத் மாதா கி ஜெய் எனக் கூறிய முதியவரை தாக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் என்று வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்வு என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.