
“BJP யின் உண்மை முகம் தெரிந்தது!!! உங்களில் எத்தனை பேருக்கு இந்த சிவப்பு டி-சர்ட் அணிந்த பெண்ணை தெரியும் அல்லது அடையாளம் தெரியும்? அவள் பெயர் ஸ்வாதி. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஏர் இந்தியா விமானத்தில் ஆஸ்திரேலியா சென்றவர்களுக்கு அவளை அடையாளம் தெரியும். அவள் ஏர் இந்தியாவின் போயிங் 777 மற்றும் 787 விமானங்களில் நீண்ட காலமாக விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினாள். ஆம், உங்கள் தகவலுக்கு, அவளுடைய தந்தை ஒரு உயர் பதவியில் இருப்பவர் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அவள் தனது உண்மையான அடையாளத்தை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை, அமைதியாக தனது வேலையை முழுத் திறமையுடன் செய்து கொண்டிருந்தாள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏர் இந்தியா "டாடா" க்கு சொந்தமானதாக இருந்தபோது, டாடா நிர்வாகம் அவளுடைய சுயவிவரத்தைப் பற்றி அறிந்தபோது, பின்னர் அவளுடைய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவள் அமைதியாக ஏர் இந்தியாவின் உள் விவகார அலுவலகத்திற்கு மாற்றப்பட்டாள். அவளுடைய முழுப் பெயரை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், அவளுடைய முழுப் பெயர் ஸ்வாதி கோவிந்த். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜியின் மகள்... ஸ்வாதி கோவிந்த்.
இதுதான் பாஜகவின் கலாச்சாரம். எனக்கு பாஜக ஏன் பிடிக்கும் என்று நான் இன்னும் சொல்ல வேண்டுமா? ஒரு ஜனாதிபதியின் மகள் விமான பணிப்பெண்ணாக ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்தில் பணியில் இருக்கிறார். அவரது தந்தை ஜனாதிபதியாக பதவி வகித்து கொண்டிருந்தபோதே பணிப்பெண்ணாகத்தான் இருந்தார்.. யாருக்கும் தெரியாது.. இங்கே திராவிட கலாச்சாரத்தை எண்ணி பாருங்கள்.. ஒரு சாதாரண MLA மகள் இப்படி மாத சம்பளத்தில் வேலை பார்ப்பதை பார்த்திருக்கிறீர்களா…?” என்ற தகவலுடன் இரு விமானப் பணிப்பெண்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. அதில், சிவப்பு நிற டீ சர்ட் அணிந்திருப்பவர் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி கோவிந்த் என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இப்புகைப்படத்தில் இருப்பது ராம்நாத் கோவிந்தின் மகள் இல்லை என்றும் இத்தகவல் பழையது என்றும் தெரிய வந்தது.
உண்மையில் ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி விமான பணிப்பெண்ணாக பணியாற்றினாரா என்பது குறித்து கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, The Indian Express ஊடகம் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி, போயிங் 787 மற்றும் 777 ஆகிய விமானங்களில் பணிப்பெண்ணாக பணியாற்றியதாகவும் பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில் NDTV இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில். “ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி, ஏர் இந்தியாவில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தரைவழிப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் சுவாதி தானா என்பதை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, அப்புகைப்படம் பல்வேறு ஊடகங்களில் ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்பான செய்திகளுக்கு பயன்படுத்தப்படும் மாதிரி புகைப்படம் என்பது தெரியவந்தது. அதேசமயம், சுவாதி கோவிந்த் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இருக்கும் சுவாதியின் புகைப்படங்கள் பகிரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுடன் ஒத்துப்போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய முன்னாள் ஜானதிபதி ராம்நாத் கோவிந்தின் மகளான ஸ்வாதி என்று வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது வேறொரு பெண் என்றும் வைரலாகும் தகவல் பழையது என்றும் தெரியவந்தது.