

காட்டின் நடுவே பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்டிருக்கும் கல்குவாரி ஒன்றின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் கல்குவாரி தமிழ்நாட்டில் உள்ளது என்றும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தான் இது தோண்டப்பட்டது என்றும் வாசகங்களை இணைத்து, தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர் ஒருவரால் இப்புகைப்படம் பகிர்ந்து கொள்ளப்பட்டு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Fact check:
வைரலாகும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய, அதனை ‘Reverse Image Search’ தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் ஆய்வு செய்தோம். அப்போது, ‘ Times of India’ நாளிதழில் ஏப்ரல் 2019-ல் வெளியான செய்தி ஒன்றில் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அந்தச் செய்தியின்படி, இப்புகைப்படம் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரியாகும். எர்ணாகுளம் மாவட்டத்தின் குன்னத்துநாடு, மூவாற்றுப்புழா ஆகிய தாலுகாக்களில் அளவுக்கு அதிகமான குவாரிகள் செயல்படுவதால், அப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்த கட்டுரையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், வைரலாகும் புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்ததோ அல்லது தற்போதைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதோ அல்ல என்பது தெளிவாகிறது. இது கேரளாவில் 2019 ஆம் ஆண்டிற்கு முன்பே எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படமாகும். இதே புகைப்படத்துடன் சமயம் மலையாளம் ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கல்குவாரி புகைப்படத்தை, தற்போதைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தோண்டப்பட்ட குவாரி என்று முற்றிலும் தவறான மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.