“திரௌபதி முர்முவிற்கு அழைப்பில்லை: குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் பழங்குடி சமூகத்தவர் மற்றும் விதவை என்பதால் திரௌபதி முர்மு அவர்களை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை - கோயில் நிர்வாகம்” என்று நேற்றைய(ஜனவரி 22) தேதியிட்ட புதியதலைமுறை ஊடகத்தின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் நியூஸ்கார்ட் போலியானது என்பது தெரியவந்தது. முதலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஜனவரி 12ஆம் தேதி, The Hindu வெளியிட்டுள்ள செய்தியில், “ஜனவரி 22ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜனவரி 12 அன்று பெற்றார்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று புதிய தலைமுறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று(ஜனவரி 23) விளக்கியுள்ளது. அதே சமயம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்படவில்லை என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.