“அவசர தகவல்
தயவுசெய்து கவனிக்கவும்.
உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா என்று கேட்டால், 1 ஐ அழுத்தவும் இல்லையென்றால், 2 ஐ அழுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும், ஆனால் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு எண்களை அழுத்தினால், உங்கள் மொபைல் செயலிழந்து, உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் முழுவதும் மறைந்துவிடும், எனவே உடனடியாக அழைப்பை துண்டிக்கவும். முடிந்தவரை இந்த செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்புங்கள். எல்லா மொபைல்களிலும் விரைவாகப் பரவ வேண்டும்” என்று சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது போன்ற சுற்றறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரோனா தடுப்பூசி தொடர்பான அழைப்பு செல்போனிற்கு வருகிறது என்றும் அதில் சொல்லப்படும் எண்ணை அழுத்தியதும் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது என்றும் சைபர் கிரைம் காவல்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் வதந்தி என்பது தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி Telanganaa Today செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,”இது தொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் உதவி ஆணையர் KVM பிரசாத் அளித்த விளக்கத்தின் படி, இது போலியான தகவல். இப்படி யாருக்கும் அழைப்பு வந்ததாக இதுவரையில் புகார் எதுவும் வரவில்லை. மேலும் நாங்கள் அந்த எண்ணையும் சோதனை செய்து விட்டோம். அது போலியான எண் எனக் குறிப்பிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2021ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி PIB Fact Check வைரலாகும் தகவல் தொடர்பாக எக்ஸ் பக்கத்திலும் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், “கரோனா தடுப்பூசி தொடர்பாக வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் செல்போன் ஹேக் செய்யப்படுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல” என்று கூறியுள்ளது.
தொடர்ந்து இது குறித்து தேடுகையில், கடந்த மே 16ஆம் தேதி Economic Times செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “கரோனா தடுப்பூசி அச்சத்தை பயன்படுத்தி மோசடி செய்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தாவில், இதுபோன்ற மோசடியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றன.
சுகாதாரத் துறையின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளும் மோசடி நபர்கள், கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசிகளைப் போடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, தனிநபர்களைத் தொடர்புகொள்கின்றனர் பின்னர், இந்த அழைப்பாளர்கள் ஆதார் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைக் கோருகின்றனர். கூடுதலாக, சில தனிநபர்கள் IVRS உதவியுடன் முன்னரே பதிவுசெய்யப்பட்ட செய்திகளைக் கொண்ட அழைப்புகளைப் பெறுவதாகவும், தடுப்பூசி தொடர்பான விவரங்களைக் கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று 2021ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி NDTV வெளியிட்டுள்ள செய்தியில், “செல்போனில் உள்ள தொடர்பு பட்டியலை திருடும் வகையில் பயனர்களின் ஆண்ட்ராய்டு போனிற்குள் தீங்கிழைக்கும் வகையில் நுழையும் போலியான கோவிட்-19 தடுப்பூசி பதிவு தொடர்பான எஸ்எம்எஸ் புழக்கத்தில் இருப்பதாக மத்திய இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கரோனா தடுப்பூசி தொடர்புடைய தொலைபேசி அழைப்பைக் கொண்டு அதில் கூறப்படும் எண்ணை அழுத்தியதும் செல்போன் ஹேக் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.