

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், நெரிசலைத் தவிர்க்கவும், பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்வதைத் தடுக்கவும் தவெக ஆட்சியில் சிறப்புப் பேருந்து திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகப் பேருந்துகள் இயக்கப்படத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பள்ளி வளாகத்திற்குள்ளேயே பேருந்து வந்து மாணவர்களை ஏற்றி இறக்கும் வசதியையும் கொண்டிருந்தது. இந்தத் திட்டம் தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் இத்திட்டம் திமுக ஆட்சியிலேயே துவங்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டம் குறித்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில், இந்தத் திட்டம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது. அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் இந்தத் திட்டம் ஆகஸ்ட் 18, 2025 அன்று சென்னை, திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒன்இந்தியா தமிழ் தளம் ஜூலை 11, 2025 அன்று வெளியிட்ட செய்தியில், சென்னை போக்குவரத்துக் கழகம் சார்பில் பெண்களுக்கு என பிரத்யேகப் பேருந்துகளும், மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் வெளியிட்ட செய்தியில், சென்னை மாநகரில் பள்ளி மாணவர்களுக்கான இந்தச் சிறப்புப் பேருந்து சேவை மிகவும் பிரபலமடைந்திருப்பதையும், மாணவர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதையும் விளக்கியுள்ளது.
மேலும், கலைஞர் செய்திகள் தளம் ஆகஸ்ட் 18, 2025 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தியில், அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் இந்தச் சிறப்புப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டம் என்பது கடந்த 2025 ஆம் ஆண்டிலேயே திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு முற்போக்கான திட்டமாகும். தற்போது இந்தத் திட்டம் புதிய ஆட்சியில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களைப் புதிய அரசு கொண்டு வந்ததாகப் பரப்புவது அரசியல் உள்நோக்கம் கொண்ட தவறான பிரசாரம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.