Fact Check: மது அருந்தும் பள்ளி மாணவிகள்; திமுக ஆட்சியில் நடைபெற்றதா?
“திராவிடம் வளர்த்தெடுத்த பெரியார் பேத்திகள்” என்ற கேப்ஷனுடன் திமுக ஆட்சியில் பள்ளி மாணவிகள் மது அருந்துவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இச்சம்பவம் 2020ஆம் ஆண்டு நடைபெற்றது என்றும் அச்சமயம் அதிமுக ஆட்சி நடைபெற்றதும் தெரியவந்தது. இக்காணொலியின் உண்மைத்தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் காணொலியில் உள்ள ஒரு பகுதி புகைப்படத்துடன் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி விகடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், “அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கு மூவர் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு மதுபானத்தை குடிக்கின்றனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை Asianet Tamil, Daily Thanthi உள்ளிட்ட ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. மேலும், இச்சம்பவம் நடைபெற்ற 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியில் பள்ளி மாணவிகள் மது அருந்துகின்றனர் என்று வைரலாகும் காணொலி 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்றும் அச்சமயம் அதிமுக ஆட்சி நடைபெற்றதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.