Fact Check: சென்னையில் அரசு சார்பில் ஹஜ் இல்லம் ஏற்கனவே உள்ளதா? உண்மை அறிக
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகேயுள்ள நங்கநல்லூரில், ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில், ரூபாய் 39 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஹஜ் இல்லக் கட்டிடம் கட்டப்படுகிறது. புனித யாத்திரை செல்லும் சுமார் 400 பயணிகள், தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக இங்கு கட்டணமின்றித் தங்குவதற்கு ஏற்ப இந்த இல்லம் அமைகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில், ஐந்து தளங்கள் மற்றும் 400 அறைகளுடன் அமையவுள்ள இந்தக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (டிச. 16) அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில்,”யார் அப்பன் வீட்டு காசு ? மக்கள் வரிப்பணத்தில் 39 கோடி ரூபாய் செலவில் சென்னை நங்கநல்லூரில் இரண்டாவது ஹஜ் இல்லம் எதற்கு ஏன் ? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே பெரியமேட்டில் ஏற்கனவே ஹஜ் இல்லம் இருக்கும்போது இன்னொரு ஹஜ் இல்லம் நங்கநல்லூரில்?” என்ற கேள்வியுடன் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் சூளையில் இயங்கி வரும் ஹஜ் இல்லம் தனியாருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு அலகு வைரலாகும் தகவல் தவறானது என்றும் சென்னையின் சூளையில் இயங்கி வரும் ஹஜ் இல்லம் தனியாருக்கு சொந்தமானது என்று தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்து.
இது தொடர்பாக தொடர்ந்து தேடுகையில் சூளையில் இயங்கி வரும் ஹஜ் இல்லத்தின் முகப்பு வாயிலில் தமிழ்நாடு ஹஜ் சர்விஸ் சொசைட்டி என்ற பதாகை இடம் பெற்றிருந்தது என்பது கூகுளின் பதிவேற்றப்பட்டு இருந்த புகைப்படத்தின் வாயிலாக தெரியவந்தது.
மேலும், சவுத் செக் தமிழ்நாடு ஹஜ் சர்விஸ் சொசைட்டியை தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கம் கேட்டோம். அப்போது, “இது தமிழ்நாடு ஹஜ் சர்விஸ் சொசைட்டி என்ற தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் என்றும், தமிழ்நாடு ஹஜ் சர்விஸ் சொசைட்டி என்பது தனியார் சேவை அமைப்பு” என்றும் விளக்கம் அளித்தனர்.
Conclusion:
முடிவாக நம்தேடலில் சென்னை சூளை பகுதியில் ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஹஜ் இல்லம் இயங்கி வரும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அது தனியார் அமைப்பிற்கு சொந்தமான திருமண மண்டபம் என்றும் தெரியவந்தது.

