
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்தானதாக ஒன்றிய அரசு அறிவித்தது. தொடர்ந்து நேற்று (மே 7) நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindhoor)’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், “மீண்டும் திறக்கப்பட்ட செனாப் நதி..10 பைசா செலவில்லாம மரண பயத்தை காட்டும் நரேந்திர மோடி ஜி” என்ற கேப்ஷனுடன் ஒரு காணொலியும் (Archive) “பாகிஸ்தான் நேற்று இரவு முதல் அமிர்தசரஸ் பொற்கோவிலைத் தாக்குவதற்காக செலுத்திய ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தும் நமது S-400 ட்ரோன்கள்” என்ற கேப்ஷனுடன் மற்றொரு காணொலியும் (Archive) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் இரு காணொலியும் வெவ்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்றும் தெரியவந்தது.
பதிவு 1:
முதலில் செனாப் நதி திறந்து விடப்பட்டதா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நீரை துண்டிப்பதற்காக ராம்பனின் செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் நீர்மின் திட்ட அணையின் அனைத்து வாயில்களையும் மூடிய பின்னர், அணையின் இரண்டு மதகுகளை இந்திய அரசாங்கம் மீண்டும் இன்று (மே 8) திறந்தது.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த ராணுவ மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து செனாப் நதி அணை மூடப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவே இந்த அணை மீண்டும் திறக்கப்பட்டதாக The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Hura12.1 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டிருந்தார். அதில், படாக்சான் மாகாணம் ஒரு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படாக்சான் என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாகாணம். இதன் மூலம் முதற்கட்டமாக வைரலாகும் காணொலி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது என்றும் பழையது என்றும் தெரியவந்தது.
"ஆப்கானிஸ்தான் மலைகளில் கொடிய வெள்ளம். மில்லியன் டாலர் உபகரணங்கள் சேற்றில் புதைந்த தருணம்" என்று வைரலாகும் அதே காணொலி Hamidreza-satar என்ற யூடியூப் சேனலில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், Darwaz Zeeba என்ற இன்ஸ்டாகிராம் பயனரும் இதே காணொலியை வெளியிட்டுள்ளார்.
பதிவு 2:
தொடர்ந்து, "பாகிஸ்தான் நேற்று இரவு முதல் அமிர்தசரஸ் பொற்கோவிலைத் தாக்கியதாகவும் அதனை S-400 வகை ட்ரோன்களை இடைமறித்து வீழ்ததியதாகவும்" வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி Israel Hayom என்ற ஹீப்ரு மொழி ஊடகம் வைரலாகும் அதே காணொலியை வெளியிட்டுள்ளது. அதில், "இஸ்ரேலின் கிர்யாத் ஷ்மோனா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில் Times of Israel ஊடகத்தின் ராணுவ செய்தியாளர் Emanuel (Mannie) Fabian அதே தேதியில் வைரலாகும் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கிர்யாத் ஷ்மோனாவில் உள்ள Galilee Panhandle பகுதியில் லெபனானின் ராக்கெட் தாக்குதலை இடைமறித்த அயர்ன் டோம்” என்று குறிப்பிட்டுள்ளார். El Litoral என்ற ஸ்பானிஷ் ஊடகமும் காணொலி தொடர்பான விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.
உண்மையில் அமிர்தசரஸ் பொற்கோவில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலை இந்தியா இடைமறித்த பிறகு, ஏவுகணையின் ஒரு பகுதி அமிர்தசரஸில் விழுந்தது என்று NDTV இன்று (மே 8) செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நீடித்து வரும் இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வைரலாகும் இரு காணொலிகளும் வெவ்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.