
“ஆஸ்திரேலியாவிலிருந்து சவூதிக்கு ஆடுகளை ஏற்றி சென்ற கப்பல் ஏமேன் அருகே கடலில் மூழ்கியதால் கடலில் தத்தளித்த ஆடுகளை அள்ளி சென்ற ஏமேன் மக்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், கடலுக்குள் தத்தளிக்கும் ஆட்டுக்குட்டிகளை சிலர் படகுகளில் ஏற்றி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. ஆடுகளை ஏற்றி செல்பவர்கள் அதனை திருடுவதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் கடலில் தத்தளித்த ஆடுகளை யேமன் மீனவர்கள் மீட்டுள்ளனர் என்று தெரியவந்தது.
இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, யேமனின் லாஜ் மாகாணத்தில் உள்ள ராஸ் அல்-ஆரா கடற்கரையில் ஒரு வணிகக் கப்பல் கரை ஒதுங்கியதை அடுத்து, செங்கடலில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகளை யேமன் மக்கள் மீட்பதை காணொலி காட்டுகிறது. ஜிபூட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கப்பல் கவிழ்ந்ததில் 160க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் நீரில் மூழ்கியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்ற தகவலுடன் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி Al Jazeera ஊடகம் வைரலாகும் அதே காணொலியை ஷார்ட்ஸாக வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, தேடுகையில் கடந்த மே 7ஆம் தேதி news.com.au என்ற ஆஸ்திரேலிய ஊடகம் வைரலாகும் காணொலி தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், ஏப்ரல் 25ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் ஆடுகளின் கூட்டம் தண்ணீரில் மிதந்து போராடுவதைக் கண்ட உள்ளூர் மீனவர்கள் அவற்றை காப்பாற்ற தீவிரமாக முயன்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடலில் தத்தளித்த ஆடுகளை யேமனிய மீனவர்கள் மீட்டதாகவே Indian Express ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக யேமன் அருகே கப்பல் கடலில் மூழ்கியதால் தத்தளித்த ஆடுகளை யேமனியர்கள் திருடிச் சென்றதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர்கள் அந்த ஆடுகளை கடலில் இருந்து மீட்டனர் என்றும் தெரியவந்தது.