காஷ்மீர் தீவிரவாத தாக்குதலின் போது சிறுவன் கண் முன்னே கொல்லப்பட்ட தந்தை 
Tamil

Fact Check: காஷ்மீரில் சிறுவன் கண் முன்னே கொலை செய்யப்பட்ட தந்தை? பஹல்காம் தாக்குதலின் போது நடைபெற்ற சம்பவமா

பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் போது சிறுவன் கண் முன்னே தனது தந்தை கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

Ahamed Ali

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 22) சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சிறுவனின் தந்தையை, சிறுவனின் கண் முன்னே சுட்டு கொன்றதாகவும் தனது தந்தை தான் ஒரு இந்து என்று கூறியதும் தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொண்டதாக அச்சிறுவன் கூறியதாகவும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. காணொலியில், சிறுவன் ஒருவன் வயதானவர் மேல் ஏறி அமர்ந்திருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இப்புகைப்படம் 2020ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2020ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி Al Jazeera ஊடகம் வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரின் சோப்பூர் நகரில் மூன்று வயது குழந்தை ஒன்று தனது தாத்தாவின் இறந்த உடலின் மீது அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் கோபத்தைத் தூண்டியுள்ளது. துப்பாக்கிச்சூட்டின் போது 65 வயது முதியவரை பாதுகாப்புப் படையினர் கொன்றதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Al Jazeera வெளியிட்டுள்ள செய்தி

மேலும், National Herald ஊடகம் 2020ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியின்படி, பஷீர் அகமது கான் என்பவர் வடக்கு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சிக்கினார். இதில் பஷீர் அகமது கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மூன்று வயது சிறுவன் மட்டும் காயமின்றி தப்பியதாகும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு இறந்தவர் இஸ்லாமியர் என்று தெரிய வருகிறது.

National Herald வெளியிட்டுள்ள செய்தி

இப்புகைப்படம் யாரால் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மண்டல காவல்துறைத் தலைவர் விஜய் குமார், “இப்புகைப்படங்களை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Kashmir Post, Associated Press உள்பட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

Conclusion:

நம் தேடலில் முடிவாக சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது சிறுவன் கண் முன்னே தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும் தந்தை தான் ஒரு இந்து என்று கூறியதும் தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொண்டதாக அச்சிறுவன் கூறியதாகவும் வைரலாகும் புகைப்படம் 2020ஆம் ஆண்டு காஷ்மீரில் ஒரு இஸ்லாமியர் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Police lathicharge youths at Reservation Hatao Andolan? No, here are the facts

Fact Check: ഇത് മുഖ്യമന്ത്രി വി ഡി സതീശന്റെ വാഹനവ്യൂഹമോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: முதல்வர் விஜய்யின் பெற்றோரின் திருமணத்தின் போது அவர் அருகில் இருந்ததாக பரவும் புகைப்படம் உண்மையானதா அல்லது போலியானதா?

Fact Check: ಹೈದರಾಬಾದ್ ರೈಲಿನಲ್ಲಿ ನಮಾಜ್ ಮಾಡುತ್ತಿರುವ ದೃಶ್ಯ ಎಂದು ಉತ್ತರ ಪ್ರದೇಶದ ವೀಡಿಯೊ ವೈರಲ್

Fact Check : ప్రధాని మోదీని దూషించినందుకు తల్లిదండ్రులు కుమార్తెను కొట్టారా? లేదు, వైరల్ వీడియో పాతది