நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்துள்ளது. மே 10 அன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடன் அக்கட்சியைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தச் சூழலில், சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா என்பவர்தான் "தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர்" என்ற தகவல் தவெக ஆதரவு சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது.
தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் என்பது குறித்து நாம் ஆய்வு செய்தபோது, வைரலாகும் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியானது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாகவே, 1946-ல் மதராஸ் மாகாணத்தில் டி. பிரகாசம் தலைமையிலான அமைச்சரவையில் பொது சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் ருக்மிணி லட்சுமிபதி. இவரே தமிழக வரலாற்றின் முதல் பெண் அமைச்சர் ஆவார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, 1953-ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக ஜோதி வெங்கடாசலம் பதவி வகித்துள்ளார். இவற்றை எல்லாம் தவிர்த்து அதிமுக ஆட்சியில் நிலோஃபர் கஃபீல், சென்ற திமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவரும் கீதா ஜீவன் என்ற பெண் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழக வரலாற்றில் ஏற்கனவே பல பெண் அமைச்சர்கள் திறம்பட பணியாற்றியுள்ள நிலையில், தவெகவின் கீர்த்தனாவை "முதல் பெண் அமைச்சர்" எனக் கூறுவது வரலாற்றுத் பிழையாகும்.
Conclusion:
தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் கீர்த்தனா அல்ல; 1946-லேயே ருக்மிணி லட்சுமிபதி அந்தப் பொறுப்பை அலங்கரித்துள்ளார். தவெக ஆதரவு பக்கங்கள் பரப்பும் செய்தி பொய்யானது.