சன் நியூஸ் ஊடகத்தின் இலச்சினையுடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு சமீபகாலமாக அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில், "திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்து விடுமா? அல்லது படிப்பு வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா?" என முதலமைச்சர் கேள்வி எழுப்பியதாக வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆன்மீக நம்பிக்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் பேசியதாகக் கருதி, பலரும் இந்த நியூஸ் கார்டை உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்று தெரியவந்தது.
முதலில், வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ள தமிழ் எழுத்துருக்களை (Fonts) ஆய்வு செய்தபோது, அவை சன் நியூஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தும் எழுத்துருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டது. மேலும், ஒரு மாநில முதலமைச்சர் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தால், அது அனைத்து முதன்மை ஊடகங்களிலும் நேரடிச் செய்தியாக வெளியாகியிருக்கும். ஆனால், எந்த ஒரு நம்பகமான ஊடகத்திலோ அல்லது சமூக வலைதளப் பக்கங்களிலோ இது போன்ற செய்தி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தெளிவுக்காக, சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவின் பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு இந்த வைரல் கார்டு குறித்து விளக்கம் கேட்டோம். அவர் இந்த நியூஸ் கார்டு முற்றிலும் போலியானது என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும், ஏப்ரல் 1, 2026 அன்று சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டில், "மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது போல் திமுக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்" என்று முதலமைச்சர் பேசியதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பழைய நியூஸ் கார்டை எடிட் செய்து, தவறான வாசகங்களைப் புகுத்தி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டுள்ளது இதன் மூலம் தெளிவாகிறது.
Conclusion:
முடிவாக, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் பசி – பஞ்சம் போய்விடுமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.