தமிழக காவல் துறையின் 'சிங்கப்பெண்' அதிரடிப்படை சீருடையில் இரண்டு பெண்கள் நடனமாடி ரீல்ஸ் செய்யும் காணொலி ஒன்று அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. காவல்துறையினர் பணியில் இருக்கும்போது இப்படி ரீல்ஸ் செய்யலாமா என்ற கேள்விகளுடனும், விமர்சனங்களுடனும் பலரும் இந்தக் காணொலியைப் பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி தவறானது என்று தெரிய வந்தது. மேலும், அதில் இருப்பவர்கள் துணை நடிகர்கள் என்று தெரியவந்தது.
வைரலாகும் இந்தக் காணொலியின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மையை அறிய நாம் களமிறங்கி ஆராய்ந்தோம். தீவிர தேடுதலுக்குப் பின், காணொலியில் இருக்கும் பெண்கள் நிஜமான சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்கள் இல்லை என்பதும், அவர்கள் திரைப்படங்களில் நடிக்கும் துணை நடிகைகள் என்பதும் உறுதியானது.
சமீபத்தில் நடிகர் கூல் சுரேஷ் தனது புதிய திரைப்பட விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை சீருடை அணிந்து வந்திருந்தார். அவருடன் விளம்பரக் காரணங்களுக்காக சில துணை நடிகைகளும் அதே சீருடையில் அழைத்து வரப்பட்டனர். அந்த விளம்பர நிகழ்வின் இடைவேளையின் போது, அங்கு வந்திருந்த துணை நடிகைகள் இருவர் பொழுதுபோக்கிற்காக எடுத்த ரீல்ஸ் காணொலியே தற்போது தவறான புரிதலுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
கூல் சுரேஷின் இந்த விளம்பர நிகழ்ச்சி குறித்து 'நியூஸ் தமிழ்' ஊடகம் அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தக் காணொலியை ஆய்வு செய்தபோது, அதில் வைரல் ரீல்ஸில் இருக்கும் அதே இரு பெண்களும் அதே சீருடையில் இருப்பதை நம்மால் தெளிவாகக் காண முடிந்தது.
மேலும். தமிழக காவல்துறையினர் இது தொடர்பாக எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் இது தொடர்பாக மேற்கொள்ளவில்லை என்று தெரியவந்தது. இதுமட்டுமின்றி, இச்சம்பவம் தொடர்பாக 'பாலிமர் நியூஸ்' மற்றும் 'குமுதம் நியூஸ்' ஆகிய முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட காணொலிச் செய்திகளிலும் இந்தத் துணை நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Conclusion:
எனவே, சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் செய்து வைரலாகும் பெண்கள் உண்மையான பெண் காவலர்கள் அல்ல என்றும், அவர்கள் திரைப்பட விளம்பரத்திற்காக சீருடை அணிந்த துணை நடிகைகள் என்பதும் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.