தமிழக முதல்வர் விஜய் தில்லி ஜந்தர் மந்தருக்குச் சென்று, தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகக் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக் இந்தக் காணொலியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தபோது, இது திட்டமிட்ட தவறான தகவல் என்பது தெளிவாகிறது.
முதலாவதாக, முதல்வர் விஜய் தில்லி சென்றதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ பயணப் பதிவுகளோ, ஊடகச் செய்திகளோ அல்லது அரசாங்க அறிவிப்புகளோ வெளியாகவில்லை.
இரண்டாவதாக, இந்த காணொலி காட்சிகளை நுணுக்கமாக ஆய்வு செய்ததில், இவை சமீபத்தில் முதல்வர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் கலந்துகொண்ட பொது நிகழ்வுகளில் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் நமக்கு கிடைத்த காணொலியில் அதே காவலர்கள் மற்றும் மெய்க்காப்பாளர்களால் சூழப்பட்ட நிலையில் விஜய் இருக்கும் பல காணொலிகளை நாங்கள் கண்டோம்.
ஜூலை 13 அன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட காணொலியை நாங்கள் கண்டறிந்தோம். பெரம்பூர் மக்கள் முதல்வர் விஜய்க்கு அளித்த பிரம்மாண்டமான வரவேற்பை அந்த காணொலி காட்டுவதாக அப்பதிவின் குறிப்பு தெரிவிக்கிறது. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் கீவர்ட் சர்ச் செய்து பார்த்ததில், ஜூலை 13 அன்று NDTV மற்றும் பாலிமர் நியூஸ் ஆகியவை பகிர்ந்திருந்த காணொலிச் செய்தியை கண்டறிந்தோம்.
சிவப்பு நிறச் சட்டை அணிந்த அதே நபர் விஜய்யுடன் இருப்பதையும் இந்த கானொலியில் தெரிந்தது. விஜய்யின் பெரம்பூர் வருகை குறித்த மற்றொரு காணொலி, ஜூலை 13 அன்று ‘Thalapathy Vijay Exclusive Road Yatra | TVK | CM Joseph Vijay | Aadhav Arjuna | Perambur Public Meet’ என்ற தலைப்பில் யூடியூப் ஷார்ட்ஸில் பகிரப்பட்டது. 00:23 நிமிடத்தில், கூட்டத்தில் இருந்த ஒருவரிடமிருந்து பழுப்பு நிறக் காகிதத்தில் சுற்றப்பட்ட சிவப்பு நிறப் பூக்களை விஜய் பெற்றுக்கொள்வதைக் காண முடிகிறது. முதல் வீடியோவிலும் இதே பூங்கொத்து காணப்பட்டது.
இந்த மூலம் பெரம்பூரில் நடைபெற்ற அந்தத் தொகுதி சார்ந்த மக்கள் நலப் பணி நிகழ்வுகளை, தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டக் களத்துடன் சம்பந்தமில்லாமல் இணைத்து, தவறான பிம்பத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்துள்ளனர்.
சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வரும் சூழலைப் பயன்படுத்தி, முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி போலியான செய்தியைப் பரப்பி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
Conclusion:
தமிழக முதல்வர் விஜய் தில்லி ஜந்தர் மந்தருக்குச் சென்று சோனம் வாங்சுக்கைச் சந்தித்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. பெரம்பூரில் நடைபெற்ற அரசு விழா வீடியோக்களைத் தவறான தகவலுடன் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்