“உள்ளுக்கா இருப்பவன் வடகலையா இல்ல வெளிய இருப்பவன் வடகலையா ஒரு டவுட் தான். உள்ள வெளிய இருக்கிற ரெண்டு கோஷ்டியும் தறுதலை கோஷ்டினு மட்டும் நல்ல தெரியுது. கடவுள் அங்க இருந்த இந்த ரெண்டு கோஷ்டியோட கண்ணையும் குத்தி கிழிச்சிருக்கனும்” என்ற கேப்ஷனுடன் கோவிலில் இருதரப்பினர் இலைக்கட்டு போன்ற ஒன்றை வீசிக்கொள்ளும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருப்பவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வடகலை, தென்கலை ஆகிய இரு பிரிவினர் என்றும் அவர்கள் சண்டையிட்டுக்கொள்வது போன்றும் பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இது கோவில் விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி என்பது தெரியவந்தது. முதலில், வைரலாகும் காணொலியில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்த சொற்களை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். அப்போது, “ஆந்திர மாநிலம் சிம்மாச்சலத்தில் அமைந்துள்ள வராக லட்சுமி நரசிம்மா் கோவிலில் நடத்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி” என்று எழுதப்பட்டிருந்தது.
மேலும், காணொலியில் இருந்த @sribhakthitattvamofficial என்ற சொல்லை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியதில். “சிம்மாச்சலத்தில் உள்ள வராக லட்சுமி நரசிம்மா் கோவிலில் நடந்த வேடிக்கை(Funotsavam) நிகழ்ச்சி” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, காணொலியில் இருக்கக்கூடிய சிலர் மகிழ்ச்சியுடன் சிரிப்பதையும் நம்மால் காண முடிகிறது. இவற்றைக் கொண்டு இவர்கள் சண்டையிட்டுக்கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கோவிலில் வடகலை, தென்கலை பிராமணர்களுக்கு இடையே சண்டை என்று வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது கோவில் விழாவில் நடத்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.