
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் அணியக்கூடிய தொப்பியை அணிந்து உணவு உண்ணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இஸ்லாமியர்களின் தொப்பியை மட்டும் அணியும் இவர் ஏன் இந்துக்களைப் போன்று நெற்றியில் விபூதி வைத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வியுடன் இப்புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
பொதுவாக தொப்பி அணிந்து கட்சித் தலைவர்கள் ரமழான் நோன்பின் போது இஃப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம். அதுபோன்ற நிகழ்வில் கமல்ஹாசன் ஏதும் கலந்து கொண்டாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், கடந்த மார்ச் 29ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் ஐடி விங் எக்ஸ் பக்க பதிவின்படி, மண்டலசெயலாளர் பிரேம்நாத் தலைமையில் பாளையங்கோட்டையில் மார்ச் 28ஆம் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் கமல் ஹாசன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அவரது கை உணவு பொருள் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் சிறிய குழியை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை அறியமுடிகிறது. இதனை உறுதிப்படுத்த அப்புகைப்படத்தை Hive Moderation இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்த போது 99.9% இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், Wasit AI என்ற இணையதளமும் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவையே தந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இஸ்லாமியர்களின் தொப்பியை அணிந்து உணவு உண்பது போன்று வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.