
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பணத்தால் ஆன மாலை அணிவிக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. சிலர் கமிஷன் பணத்தை இவ்வாறு மாலையாகவும் கொடுக்கலாம் என்று கூறி இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
முதலில் இவ்வாறான பண மாலை உதயநிதி ஸ்டாலினுக்கு அணிவிக்கப்பட்டதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். ஆனால், அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. தொடர்ந்து வைரலாகும் காணொலியை முழுவதுமாக ஆய்வு செய்தோம்.
அப்போது, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருந்தால் இருக்கக்கூடிய முரண்பாடுகள் அக்காணொலியில் இருப்பது தெரியவந்தது. அதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கும் மாலை அணிவிக்கும் நபருக்கும் பின்னால் இருக்கக்கூடியவர் காலால் நடக்காமல் காற்றில் பறப்பது போன்று நகர்வதை நம்மால் காண முடிகிறது.
மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு வலது புறம் நிற்கும் கண்ணாடி அணிந்த நபர் கைதட்டும் போது அவரது கை விரல்கள் சரியாக அசையவில்லை, சில நேரங்களில் ஒரு விரல் மட்டுமே அவருக்கு இருப்பது போன்று காட்டுகிறது. அதேபோன்று மாலையின் அடிப்பகுதியில் வலது புறம் மேசையின் மேல் இருக்கக்கூடிய டீ கப் மற்றும் மாலை ஒன்றோடு ஒன்று கலப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இவற்றைக் கொண்டு இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
தொடர்ந்து இக்காணொலியை DeepFake-O-Meter என்ற இணையதளத்தில் பதிவேற்றி. ஆய்வு செய்ததில், ஆறில் நான்கு Detectorகள் 52%ல் இருந்து 60% வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்ற முடிவை தந்தன. TALL (2023) மற்றும் LSDA (2024) ஆகிய இரு Detectorகள் மட்டும் முறையே 46.5% மற்றும் 45.6% வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்ற முடிவை தந்தன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பண மாலை அணிவிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.