“80 கோடி இந்திய மக்களை வறுமையில் தள்ளிட்டு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாம எப்படி ஒருத்தனால இப்படி ஆட முடியுது??” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அதில் இருக்கும் நபர் பிரதமர் நரேந்திர மோடி என்று பரப்பப்பட்டு வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, எக்ஸ் தளத்தில் mediacrooks என்ற பயனர் வைரலாகும் காணொலியை பதிவிட்டிருந்தார். அதில், bluelotushryda என்ற பயனர் காணொலியில் இருப்பது மோடி இல்லை என்றும் அவர் மோடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும் விகாஸ் மஹந்தே என்பவர் என்று விகாஸ் மஹந்தேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின்(vikas_mahante) ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், விகாஸ் மஹந்தே குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியபோது அவர் பிரதமர் நரேந்திர மோடியின் தோற்றத்தில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தேடுகையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டுள்ளார். அதில், “லண்டனில் நடைபெற்ற "கேலக்ஸி தீபாவளி பஜார் 2023" நிகழ்ச்சியில் நான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன்..” என்று குறிப்பிட்டுள்ளார். மோடியின் தோற்றத்தில் இருப்பதால் அவரை பல்வேறு இடங்களுக்கு சிறப்பு விருந்தினராகவும் அழைத்துள்ளனர். அது தொடர்பான பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தொழிலதிபரான இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இந்திய மக்களை வறுமையில் தள்ளிவிட்டு குற்ற உணர்வின்றி பிரதமர் நரேந்திர மோடி நடனம் ஆடுவதாக வைரலாகும் காணொலியில் இருப்பது மோடியைப் போன்ற தோற்றம் உடைய விகாஸ் மஹந்தே என்பவர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.