முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார் என்றும், அவர்களின் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார் என்றும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. குறிப்பாக எக்ஸ் போன்ற தளங்களில் "மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு" என்ற வாசகங்களுடன் இந்த தகவல் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் இது திமுக ஆட்சியிலேயே வெளியிடப்பட்டது என்றும் தெரியவந்தது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த செய்தி குறித்து கீவேர்டுகள் மூலம் கூகுள் தேடலில் ஆய்வு செய்தோம். அப்போது, அரசுப் பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த கோரிக்கையின் அடிப்படையில், கடந்த திமுக ஆட்சியின் போதே அதாவது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 இன் பிரிவு 34 இன் அடிப்படையில், அரசு பணிகளில் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான வழிமுறைகளை அப்போதைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டிருந்தது. மேலும், இந்த அரசாணையின்படி 4 சதவீத இடஒதுக்கீடு என்பது அனைத்து அரசுப் பணிகளுக்கும் பொருந்தாது என்றும், அரசு மூலமாக பிரத்யேகமாக அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நமக்குக் கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகள் அடங்கிய அரசாணை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த திமுக ஆட்சியிலேயே வெளியிடப்பட்டுவிட்டது.