பத்தாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2026 பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சூழலில், ஐசிசி அமைப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஓராண்டு தடை விதித்துள்ளதாக ஒரு செய்திக்குறிப்பு சமூக வலைதளங்களில் பரவியது. அதில், பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு ஓராண்டு தடை, 2040 ஆம் ஆண்டு வரை ஐசிசி தொடர்களை நடத்தத் தடை மற்றும் பாகிஸ்தானின் ஆண்டு வருவாய் 5.75 சதவீதத்திலிருந்து 2.25 சதவீதமாகக் குறைப்பு போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
Fact check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் செய்திக்குறிப்பு எடிட் செய்யப்பட்டது என்றும் போலி என்றும் தெரியவந்தது.
இத்தகவலின் உண்மைத்தன்மையை அறிய ஐசிசியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் ஆய்வு செய்தபோது, ஐசிசி இணையதளத்தில் கடத்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று வெளியான உண்மையான செய்திக்குறிப்பில், “பாகிஸ்தானின் முடிவு ஐசிசி போட்டிகளின் நிலைத்தன்மை மற்றும் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக” மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மற்ற நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று ஐசிசி எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர, தடை விதிப்பது குறித்தோ அல்லது அபராதம் குறித்தோ எந்தத் தகவலும் அதில் இடம் பெறவில்லை.
தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், டிடி ஸ்போர்ட்ஸ் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட ஐசிசியின் உண்மையான செய்திக்குறிப்புக்கும் சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்திக்குறிப்புக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. வைரலாகும் செய்திக்குறிப்பின் எழுத்துரு உண்மையான செய்திக்குறிப்பிலிருந்து மாறுபட்டிருப்பதோடு, அதில் ஜெய் ஷாவின் கையொப்பம் போலியாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐசிசியின் உண்மையான செய்திக்குறிப்பில் அத்தகைய கையொப்பம் ஏதும் இடம்பெறவில்லை.
Conclusion:
முடிவாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் எடிட் செய்யப்பட்ட போலி செய்திக்குறிப்பின் அடிப்படையில் பரப்பப்படும் வதந்தி என்பது தெளிவாகிறது.