ராணுவ தாக்குதலுக்கு பயந்து ஓடும் பாகிஸ்தானியர்கள் 
Tamil

Fact Check: ‘ஆபரேஷன் சிந்தூர்’ - இந்திய ராணுவ தாக்குதலுக்கு பயந்து ஓடிய பாகிஸ்தானியர்கள்? உண்மை அறிக

இந்திய ராணுவ தாக்குதலுக்கு பயந்து ஓடும் பாகிஸ்தானியர்கள் என்று சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

Ahamed Ali

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindhoor)’ என்ற பெயரில் நேற்று (மே 7) நள்ளிரவு 1.30 மணியளவில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்நிலையில், இத்தாக்குதலுக்கு பயந்து ஓடும் பாகிஸ்தானியர்கள் என்ற கேப்ஷனுடன் பல்வேறு காணொலிகள் வலதுசாரியினரால் பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் இரு பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலிக்கும் 'ஆபரேஷன் சிந்தூருக்கும்' எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது.

பதிவு 1:

இந்திய ராணுவ தாக்குதலின் விளைவாக பாகிஸ்தானின் சாலையில் தீப்பிடித்த பொருட்கள் சிதறி கிடப்பது போன்றும் வாகனங்கள் தீயில் எறிவது போன்ற காட்சி வைரலாகி வருகிறது (Archive). இதன் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி SafSaf என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், வடகிழக்கு பிலடெல்பியாவில் விமானம் விபத்துக்குள்ளானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் முதற்கட்டமாக இக்காணொலி பழையது என்றும் விமான விபத்து தொடர்புடையது என்றும் தெரியவந்தது. மேலும், DMP News என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விமான விபத்து என்றே வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு தேடுகையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பிலடெல்பியா விமான விபத்து தொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டுள்ளது Daily Express US என்ற ஊடகம். அதன்படி, பிலடெல்பியாவில் நடந்த ஒரு சிறிய விமான விபத்தில் ரூஸ்வெல்ட் பவுல்வர்டு மற்றும் காட்மேன் அவென்யூ பகுதியில் உள்ள வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்து பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து வடகிழக்கே 3 மைல்களுக்கு குறைவான தூரத்தில் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான விபத்து தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள Daily Express US

பதிவு 2:

தொடர் வெடி விபத்துக்கு அருகே மக்கள் கூட்டம் கூட்டமாக பயந்து ஓடக்கூடிய காணொலி வைரலாகி வருகிறது (Archive). இக்காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Baker Atyani என்ற எக்ஸ் பயனர் 2023ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டுள்ளார். அதில், காசாவில் உள்ள இந்தோனேசியா மருத்துவமனை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது. பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வைரலாகும் காணொலியை Al Jazeera தனது யூடியூப் சேனலில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டுள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையின் அருகே வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அதே ஆண்டு செய்தியாக வெளியிட்டுள்ள Al Jazeera, வடக்கு காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையில் ஒன்றான இந்தோனேசிய மருத்துவமனை, இஸ்ரேலிய தாக்குதலில் மிகவும் மோசமாக சேதமடைந்ததால், அது மீண்டும் திறக்கப்படாமல் போகலாம் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் இந்திய ராணுவத்தின் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானியர்கள் பயந்து ஓடுவதாக வைரலாகும் காணொலிக்கும் இந்திய ராணுவ தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Mosque burnt in Kolkata after BJP came to power in 2026? No, here are the facts

Fact Check: സത്യപ്രതിജ്ഞ ചടങ്ങില്‍ വി ഡി സതീശന്‍ വന്ദേമാതരത്തിന് എഴുന്നേറ്റുനില്‍ക്കാന്‍ വൈകിയോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்த தடை: தவெக அரசின் புதிய உத்தரவா? உண்மை பின்னணி

Fact Check: ಪಶ್ಚಿಮ ಬಂಗಾಳದಲ್ಲಿ ಅಕ್ರಮ ಬಾಂಗ್ಲಾದೇಶಿ ವಸಾಹತುಗಳ ಮೇಲೆ ಬುಲ್ಡೋಜರ್ ಕಾರ್ಯಾಚರಣೆ ಎಂದು ಬಾಂಗ್ಲಾದೇಶದ ವೀಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: మే 14 నుంచి ప్రతి ఆదివారం పెట్రోల్ బంకులు పని చేయవు? వైరల్ అవుతున్న వీడియో వెనుక నిజం ఇదే