“செல்ஃபோன் நம்பருக்கும் கட்டணம் விதிக்க TRAI பரிந்துரை... விரைவில்… ஒரே எண்ணை பல ஆண்டுகள் வைத்திருக்க தனிக் கட்டணம். பயன்படுத்தப்படாத எண்களை துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம். ஒரே ஃபோனில் இரண்டு எண்கள் பயன்படுத்தும் நபர், ஒரு எண்ணை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி, மற்றொரு எண்ணை பயன்படுத்தாமல் இருந்தால், மற்றொருவருக்கு அந்த எண்ணை ஒதுக்காமல், தக்க வைத்துக்கொள்ள தனிக்கட்டணம். நிறுவனங்களின் மீதான அபதார கட்டணத்தை, வாடிக்கையாளரிடம் இருந்தே வசூலித்து கொள்ளவும் பரிந்துரை” என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை செய்துள்ளதாக பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு இருந்தன. இதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்களில் இத்தகவல் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் வதந்தி என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, ABP Nadu கடந்த ஜூன் 15ஆம் தேதி இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “நம் செல்போனில் பயன்படுத்தும், சிம் கார்ட்களில் கிடைக்கும் சேவைகளுக்கு மட்டுமின்றி, அந்த சிம் கார்ட் எண்ணை பயன்படுத்துவதற்கே, இனி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இச்செய்தி வதந்தி என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக TRAI வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 06 ஜூன் 2024 அன்று 'தேசிய எண்முறைத் திட்டத்தின் திருத்தம்' குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. இந்நிலையில், சில ஊடக நிறுவனங்கள் (அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள்) சிம் கார்ட்களுக்கான எண்களை திறம்பட ஒதுக்கி அவற்றின் பயன்பாட்டை உறுதிசெய்யும் நோக்கத்துடன் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணங்களை அறிமுகப்படுத்த TRAI முன்மொழிந்துள்ளது என்று செய்தி வெளியிட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
ஆனால், பல சிம்கள்/ எண்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மீது TRAI கட்டணம் விதிக்க விரும்புகிறது என்று வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்ற பொய். தவறான தகவல்களைப் பரப்பும் போலியான ஊகங்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம் மற்றும் உறுதியாகக் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதே செய்தியை India TV ஊடகமும் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியிட்டுள்ளது. TRAIயின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றிய அரசின் PIB Tamilnadu இணையதளத்தில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக தொலைத்தொடர்புத் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “வைரலாகும் தகவல் தவறானது. TRAI அவ்வாறான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை” என்று கடந்த ஜூன் 14ஆம் தேதி பதிவிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சிம் கார்ட் எண்ணை பயன்படுத்துவதற்கு இனி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) கட்டணம் வசூலிக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அது வதந்தி என்று TRAI மறுத்துள்ளதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.