நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் திமுகவின் கோயம்புத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா. இத்தொகுதியில் தான் தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வியை தழுவினர். அத்தொகுதியின் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் பேசிய டி.ஆர்.பி ராஜா, “சுவையான ஆட்டு பிரியாணி கோவையில் தயாராகி வருகிறது” என்று கூறினார்.
இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை டேக் செய்து “நன்றி நீங்கள் அனுப்பிய மட்டன் பிரியாணி கிடைத்தது. என் வாழ்வில் இதுவரை இது போன்ற ஒரு மட்டமான பிரியாணியை நான் சுவைத்ததில்லை. ஒரேயொரு குறை; நான் விசிக கட்சி என்பதை மறந்து திமுக கரை வேட்டியை அனுப்பியுள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. உண்மையில் வன்னி அரசு தான் இதனை பதிவிட்டார் என்பது போன்று பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் ஃபேக் ஐடியால் பதிவிடப்பட்டது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய வைரலாகும் பதிவில் உள்ள எக்ஸ் பக்கத்தின் பயனர் பெயரான(Username) “VannikKural” என்பதை எக்ஸ் தளத்தில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அந்த எக்ஸ் பக்கத்தில் “The official Parody Account of வன்னி அரசு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பதிவை பதிவிட்டது வன்னி அரசு பெயரில் உள்ள ஃபேக் ஐடி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, தேடுகையில் வன்னி அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் பயனர் பெயர் “VanniKural” என்பதும் அது Verified கணக்கு என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் இவ்வாறான பதிவை ஏதும் பதிவிட்டுள்ளாரா என்று அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் தேடினோம். அவ்வாறாக அவர் எந்த பதிவையும் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பரியாணி வழங்கியதற்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாக வைரலாகும் தகவல் அவரது பெயரில் இயங்கும் ஃபேக் ஐடியின் பதிவு என்பது தெரியவந்தது.