“ISRO என்பது பற்றித் நமக்குத் தெரியும் ஆனால் தெரியாத ஒன்று உண்டு. பள்ளியில் படிக்கும் நம் மாணவர்களை குறிப்பாக +1 படிக்கும் மாணவர்களை ISRO-விற்கு அழைத்துச் செல்ல ஒரு MP க்கு RS.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கிறார்கள். அவர்கள் +2 தேர்வில் இயற்பியல் வேதியியல் மற்றும் கணக்கில் தலா 65% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதலாம்.
அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள். இது பற்றி தெரியாதவர்கள் தெரிந்து அவர்களும் சில ISRO விஞ்ஞானிகளை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம்தான். இது பற்றிய விவரம் வேண்டுவோர் திரு. பாலமோகன். ISRO SCHOOL EDUCATIONAL DIRECTOR அவர்களை 78928 98919 மற்றும் 94814 22237 எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என்ற தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இஸ்ரோ YUVIKA என்ற திட்டத்தை மட்டுமே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தி வருவதும் தெரியவந்தது.
வைரலாகும் தகவல் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, ISRO தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை வழங்குவதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பள்ளி குழந்தைகளுக்காக இளம் விஞ்ஞானி திட்டம் யுவ விக்யானி காரியக்ரம் (யுவிகா) என்ற சிறப்பு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் 2025ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப தேதிகள் அதிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டத்திற்கான தகுதியாக ஒன்பதாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
தொடர்ந்து தேடுகையில் இத்திட்டத்தின் முதல் பேட்ச் 2019ஆம் ஆண்டு மே13ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டதாக PIB வெளியிட்டுள்ள செய்தியின் படி தெரியவருகிறது. மேலும், வைரலாகும் தகவலில் இருக்கக்கூடிய இரண்டு தொடர்பு எண்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அழைப்பு ஏற்கப்படவில்லை.
அவ்விரண்டு எண்களையும் இணையத்தில் தேடிய போது தமிழக அரசும் இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து ஆயிரம் பேருக்கு ஒரு மாத தொழில் முனைவோர் பயிற்சி அளிக்க உள்ளதாக தினமணி ஊடகம் கடந்த 2011ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “94814 22237” என்ற எண் மட்டும் லயோலா கல்லூரி ஆசிரியர் பாலமோகன் என்பவருடையது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக எம்பி நிதியின் கீழ் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகள் இஸ்ரோ பொறியாளர் பட்டப் படிப்பை பயில்வதற்கான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் இஸ்ரோ சார்பாக இளம் விஞ்ஞானிகள் திட்டம் என்ற யுவிகா திட்டம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.