உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பல பொய்ச் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், “அயோத்தியில் உபி அரசால் நிறுவப்பட்ட நீரூற்று” என்று லேசர் நீரூற்றின் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இது நொய்டாவில் உள்ள Ved van பூங்கா என்பது தெரியவந்தது. முதலில், இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Get Fast Cook என்ற யூடியூப் சேனலில் 2023ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி “Vad van park Noida sector 78” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Newway Journey என்ற யூடியூப் சேனலில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, “இந்தியாவின் முதல் வேதிக் பூங்கா- மாலை, இரவு நேர காட்சி’’ என்ற தலைப்பில் காணொலி ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதன் 8:00வது பகுதியில் வைரலாகும் காணொலியில் உள்ள அதே லேசர் நீரூற்றின் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும், Indian Express 2023ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “நொய்டாவின் செக்டார் 78ல் அமைந்துள்ள இந்தியாவின் முதல் வேதிக் பூங்காவான Ved van பூங்காவை உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, அயோத்தியில் உத்திரப்பிரதேச அரசால் நிறுவப்பட்ட நீரூற்று என்று வைரலாகும் காணொலி உண்மையில் உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் அமைந்துள்ள Ved van பூங்கா என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.