எம்.பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது 
Tamil

Fact Check: நாமக்கல் எம்.பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? உண்மை என்ன

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி எம்.பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்

Ahamed Ali

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் வி.எஸ். மாதேஸ்வரன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும். வீட்டில் இருந்த பொருட்கள் எரித்து சேதமானதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை கண்டித்து அதிமுக ஐடி விங்கின் சமூகவலைதள பக்கங்கள் (Archive) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளன.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இது பொலி செய்தி என்றும் தெரியவந்தது.

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, தினமலர் இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த பொட்டணம் கிராமத்தில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில், அவரது 80 வயதான தாய் வரதம்மாள் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10) அதிகாலை 1:30 மணிக்கு வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

தினமலர் வெளியிட்டுள்ள செய்தி

வரதம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் செல்ல முற்பட்டனர். அதற்குள் வீட்டில் இருந்த ஏசி, மெத்தை, டேபிள், சேர், பேன், சுவிட்ச் பாக்ஸ் தீயில் எரிந்தன. வீட்டில் இருந்த 70,000 ரூபாயும் எரிந்தது. நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதற்கிடையே, எம்.பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால், வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக நேற்று மதியம் தகவல்கள் பரவின. கூடுதல் எஸ்.பி ஆகாஷ் ஜோஷி, ஆய்வாளர் கோவிந்தராஜன் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி நாமக்கல் மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, “நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தியணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இவ்விபத்தில் வீட்டிலிருந்த மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ் மற்றும் ஏசி ஆகியவை சேதமடைந்துள்ளது.

இவ்விபத்தில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இவ்விபத்து தொடர்பாக புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் இன்று (ஏப்ரல் 10) மதியம் சுமார் 1.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. மேற்கண்ட செய்தியானது பொய்யான புரளியாகும் என நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபோல் வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவல்கள் உண்மைதானா என்பதை அறிய நாமக்கல் எம்.பி மாதேஸ்வரனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வைரலாகும் தகவல் போலியானது. அதில் உண்மை இல்லை என்று அவரே விளக்கம் அளித்தனர்.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வைரலாகும் தகவல் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: ഇത് ആന്ധ്രപ്രദേശില്‍ കോളേജ് വിദ്യാര്‍ഥിനികളെ ശല്യം ചെയ്തവരെ പരസ്യമായി തല്ലുന്ന ദൃശ്യമോ? സത്യമറിയാം

Fact Check: Muslim driver defends his cow-laden truck against vigilantes with sword? No, here are the facts

Fact Check: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ காணொலி: உண்மை என்ன?

Fact Check: ಪ್ರಿಯಾಂಕ್ ಖರ್ಗೆ ಪತ್ರಕ್ಕೆ ಮೋಹನ್ ಭಾಗವತ್ ಪ್ರತಿಕ್ರಿಯೆ ನೀಡಿದ್ದಾರೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: వైరల్ అవుతున్న వీడియో గాజియాబాద్ ఘటనకు సంబంధించినది కాదు