தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
முதலாவதாக, இணையத்தில் பரவி வரும் அந்த காணொலியின் காட்சிகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். அப்போது,NT News ஊடகத்தில் ஜனவரி 01, 2026 அன்று வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், “ஜெய்ப்பூர்: மது போதையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் — PCR வாகனம் வந்ததும் பெரும் குழப்பம்” என்ற தலைப்பில் தற்போதைய வைரல் காணொலி பதிவாகியிருந்ததைக் காண முடிந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2026 புத்தாண்டு வரவேற்பை ஒட்டி, மது அருந்தி கொண்டாடுவதற்காக மதுக்கடைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டிருந்தபோது, காவல்துறையின் ரோந்து வாகனம் வருவதைப் பார்த்து அனைவரும் சிதறி ஓடினர் என்று அந்த செய்தியில் விளக்கப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் குறித்து மேலும் தேடியபோது, 'Jaipur Highlights' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதே காணொலி பகிரப்பட்டிருந்ததைக் கண்டறிந்தோம். அதிலும் ஜெய்ப்பூர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, போலீசாரின் வருகையைக் கண்டு அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு காவல்துறையின் அதிரடி நடவடிக்கை என்று பரப்பப்படும் காணொலி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2026 ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட பழைய காணொலியாகும். இதனை தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வு என்பது போல் தவெகவினர் தவறான தகவலுடன் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.