தட்டான் பூச்சி நீர் அருந்தும் காட்சி என்று சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. இது உண்மையில் நடைபெற்ற நிகழ்வு என்றும், அதனை ஒருவர் நீண்ட நாட்கள் காத்திருந்து படம்பிடித்ததாகவும் கூறி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, STEW_ScTecEngWorld என்ற Reddit பக்கத்தில் வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், இது 3D ஆர்டிஸ்டால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இது குறித்து கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Wilfried Desvergne(@Diwel01) என்பவர் தான் இக்காணொலியை உருவாக்கியவர் என்று பலரும் அவரை டேக் செய்திருந்தனர். தொடர்ந்து, அவரது எக்ஸ் பக்கத்தில் தேடியபோது, “இந்த ஷாட் எடுக்க எனக்கு மூன்று நாட்கள் ஆனது, ஒரு தட்டான் நீர் அருந்துவதை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது” என்று கூறிவிட்டு, “நான் கேலிக்காக கூறினேன், இது உண்மையில் 3D தான்” என்று கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வைரலாகும் காணொலியைப் பதிவிட்டிருந்தார்.
மேலும், இதன் க்ளோஸ் அப் காட்சிகளையும் அக்டோபர் 9ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அவர் இதுபோன்ற பல முப்பரிமாண கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவில், தட்டான் பூச்சி நீர் அருந்தும் காட்சி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் முப்பரிமாண கிராபிக்ஸ் காட்சி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.