புர்கா அணிந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது வயிற்றில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்தை கடத்துவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், புர்கா அணிந்திருக்கும் பெண் ஒருவர் வயிற்றில் இருந்து காவல்துறையினர் மர்ம பொருள் ஒன்றை எடுக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சம்பவம் என்றும் அவர்கள் இருவரும் மதுபானத்தை கடத்தியதும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Roazan News என்ற யூடியூப் சேனலில் 2021ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “ரௌசன்(Roazan) பகுதியில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது” என்று வங்காள மொழியில் தலைப்பிடப்பட்டிருந்தது.
கிடைத்த தகவலை கொண்டு வங்காள மொழியில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது. Prothomalo என்ற வங்காள ஊடகம் இது தொடர்பாக விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “சிட்டகொங்(Chittagong) பகுதியில் உள்ள ரௌசன் என்ற இடத்தில் புர்கா அணிந்து கர்ப்பிணிப் பெண் போன்று வயிற்றில் மதுபானத்தை கடத்திய முகமது சாகர்(20) மற்றும் ஆமீனா பேகம்(19) ஆகிய இருவரை சதர்காட் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரௌசன் காவல்துறையினரும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் Roazan TV வெளியிட்டுள்ள செய்தியை பகிர்ந்துள்ளனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக புர்கா அணிந்த இஸ்லாமிய பெண் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து கடத்துவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் அது உண்மையில் பங்களாதேஷ் நாட்டில் இருவர் மதுபானம் கடத்திய போது எடுக்கப்பட்ட காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.